Thursday, 20 February 2014

நதி மூலம் தேடவேண்டாம்

நதி மூலம் தேடவேண்டாம்.

இப்படித்தான் சிலர் இன்னும் ஏனோ மாறவில்லை.
என்ன வேண்டும் இவர்களுக்கு?ஏதும் புரியவில்லை.
அப்படியும் இப்படியும் எப்படியும் இவரில்லை.
அர்த்தம் சொல்லி இவர்விளங்க ஆளும் யாருமில்லை.

நன்மை என்ன தீமை என்ன நாலும் தெரிந்திருப்பான்
உண்மை அதை மறுப்பதற்கும் உள்ளொன்றும் செய்திருப்பான்.
தீமை என்றே தீர்த்ததையும் நன்மை என்றும் நட்டிவைப்பான்.
நன்மை எனத் தேர்ந்ததிலும் தீமை ஒட்டி வெட்டிப் பொயப்பான்’

நல்லதொன்று செய்தாற்குப் பொல்லதெல்லாம் சாட்சி வைப்பான்.
உள்ளபடி நல்லததை ஒப்புக்கொள்ளப் பொய்யுரைப்பான்.
நல்லதென்ற சொல்லிவற்கு பொல்லாத ஒவ்வாமை.
வல்லமை அதிலென்ன வரவாகும் இவர் பெருமை?

கேடுவரும் என்றறிந்தால் கூடியெல்லாம் எதிர்க்கலாம்
தேடி வரும் நன்மைதனை தேவையென்ன எதிர்ப்பதால்
தெருவாடத் தெரியாதவன் தெருக்கோணல் என்பானாம்.?
வரும் நன்மை வரவேற்க வலிமையற்றோன் கோழையாம்.

மனதிலொன்றை வைத்துகொண்டு மற்றவரை இழுப்பான்
சனத்திலொன்றை சொல்லிக்கொண்டு உற்றதையும் மறுப்பான்.
தனக்கிலான லாபநட்டம் கணக்கிலதைப் பார்ப்பான்.
தனக்கிலது நட்டமானால் பிணக்கியதைக் கெடுப்பான்.

நிசமாக உறங்குபவன் நிழல்பட விழித்திடுவான்.
நித்திரை போல் பாசாங்கன் நெருப்பிட்டும் எழமாட்டான்.!
பத்திரமாய் பொய்யர்களை பழகித்தான் பேசவேண்டும்`
சத்தியமாய் மனிதெரென சகலரையும் நம்பவேண்டாம்.

நன்மை உண்மையானால் நதிமூலம் தேடவேண்டாம்.
தன்மை செம்மையானால் தன்னலம் சேரவேண்டாம்.
பன்மை பாராட்டி பழிப்பவனைத் தள்ளிவிட்டு
திண்மை மனங்கொண்டு தேர்ந்ததில் கொள்வோமே!


கொ.பெ.பி.அய்யா..



No comments:

Post a Comment